"ஆபத்தான இடத்தில்" திருச்செந்தூர் முருகன் கோயில்! கருவறையில் ஓர் அதிசயம்! கோயிலை கட்டிய 5 ஆண்டிகள்!
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலை 5 ஆண்டிகள் சேர்ந்து கட்டினர். இந்த கோயில் மிகவும் ஆபத்தான இடத்தில் இருக்கிறது. ஆயினும் முருகனின் அருளாள் இதுநாள் வரை கோயிலுக்கு எந்த வித ஆபத்தும் வந்ததில்லை என்பதுதான் நிம்மதி தரும் விஷயம்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: #(திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி) கோவில் பற்றிய சில அதிசயங்கள்

ஆண்டிகள் மடம் கட்டிய கதை என்று கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு "திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்".
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற "திருச்செந்தூர் முருகன் கோயில்" ஒரு கட்டடக் கலை அதிசயம்! கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப்படும் கட்டடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.
அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும், கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள். ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் "67 மீ" தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. "133 அடி" உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து "140 மீ" தொலைவில்தான் அமைந்துள்ளது.
எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது! திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டடக்கலை அறிவும், திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது.
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகளை நீங்கள் அறிவீர்களா?
1. மௌனசுவாமி
2. காசிசுவாமி
3. ஆறுமுகசுவாமி
(இவர் ராஜகோபுரம் கட்டியவர்)
4. ஸ்ரீவள்ளிநாயகசுவாமி
5. தேசியமூர்த்திசுவாமி.
எனும் இந்த ஐந்து ஆண்டிகள்தான்!
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாலும், பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் ஆண்டிகளாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் "திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்". இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்.
தரிசனம் செய்ய செல்லும் வழி:
முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே "மூவர் சமாதி" என்ற பெயருடனே அமைந்துள்ளது. நல்ல அமைதியான இடம்.
நான்காவதாக ஞான ஸ்ரீ வள்ளி நாயக சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலிருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது. ஐந்தாவதாக ஞான ஸ்ரீ தேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக் கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்ல வேண்டும்.
அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள "காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின்" பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும். முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பார்த்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை.
அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் அவரின் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை. இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications