திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 4: மார்கழி மாசம் வந்தாச்சு! எல்லா நீர் நிலைகளும் நிரம்பியிருக்கணும்!
திருப்பாவை - பாடல் 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: மேகத்திற்கு அதிபதியான வருண பகவானே! உங்களிடம் ஒரு சொட்டு தண்ணீரை கூட வைத்துக் கொள்ளாதீர். கடல் நீர் முழுவதையும் இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு கார் மேக கண்ணனின் நிறம் போல் கருத்து பத்மநாபனின் கையில் உள்ள சக்கரத்தை போல் மின்னலை மின்ன வைத்து, வலம்புரி சங்கு போல் இடி இடித்து, வில்லில் இருந்து புறப்படும் அம்புகளை போல் மழையாக பொழியுங்கள். இதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம். மார்கழி மாதம் நீராடுவதற்காக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி இருத்தல் வேண்டும்.
விளக்கம்: மழை, வெயிலுக்குரிய தெய்வங்களை அறியாத சிறுமிகள், ஆழிமழைக் கண்ணா என அழைக்கிறார்கள். சிறுமிகளின் கோரிக்கையை ஏற்று மழையும் பெய்ததே!
திருவெம்பாவை பாடல் - 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: முத்துக்களை போல் பற்களுடன் இருக்கும் பெண்களே! இன்னும் உங்களுக்கெல்லாம் பொழுதே விடியவில்லையா, என தோழியர்கள் கேட்க, அதற்கு அந்த பெண்ணோ, அதை விடுங்கள், கிளி போல் கொஞ்சி கொஞ்சி பேசும் எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என கேட்டாள். அதற்கு அந்த தோழியர்கள், அடியே உன்னை எழுப்ப இன்னும் எத்தனை பேர்தான் வர வேண்டும். இனிமேல்தான் நாங்கள் தலை கணக்கை எண்ண வேண்டும். எனவே எண்ணிவிட்டு சொல்கிறோம். சிவப்பெருமானை எண்ணி உருகும் வேளையில் எத்தனை பேர் என்பதை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா , எனவே நீயே எழுந்து எண்ணிக் கொள் என்றார்கள்.
பொருள்: இறைவனை அடைய போட்டி போட வேண்டுமே தவிர அடுத்தவர்கள் வந்துவிட்டார்கள், அவர்கள் இறைவனை கண்டுவிட்டார்களா என்றெல்லாம் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்க கூடாது என்பதுதான் இந்த பாடலின் பொருளாகும்.












Click it and Unblock the Notifications