ஆடி மாதத்தில் கல்யாணம்.. புது வீடு பால் காய்ச்சலாமா? ஜோதிடம் சொல்வதென்ன?
சென்னை: ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதால் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆடியில் திருமணம் செய்யலாமா என்றும் புது வீடு பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்யலாமா என்றும் ஒருசிலர் கேட்கின்றனர். ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
ஆடி மாத சிறப்புகள்: கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதற்கு கடக மாதம் என்று பெயர். அதாவது, தகப்பனைக் குறிக்கும் சூரியன், தாயாரைக் குறிக்கும் சந்திரனின் சொந்த வீடான கடகத்தில் இணையும் மாதம் இது. சூரியனின் பிரத்யதிதேவதை, பசுபதி எனப்படும் ஈஸ்வரன். சந்திரனின் பிரத்யதிதேவதை, கௌரி எனப்படும் அம்பிகை. இறைவன் அம்பிகையின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். ஆன்மிக ரீதியாக நோக்கினால் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலமிது என்பதால் பெண் என்கிற சக்தி ஆடி மாதத்தில் மிகவும் மகத்துவம் பெறுகிறாள்.

ஆடி, புரட்டாசி, மார்கழி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கு உரிய மாதமாகும். கோவில்களில் விழாக்கள் களைகட்டும். அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதம், நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். மார்கழி மாதம் தனுர் மாதம் வழிபாட்டிற்கு உரிய மாதங்களாக கூறப்பட்டுள்ளது.
ஆடியில் திருமணம்: ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். இறை வழிபாட்டிற்காக இந்த மாதத்தினை ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் திருமணங்கள் நடத்துவதில்லை. ஆடி மாதத்தில் மழையும் காற்றும் அற்புதமாக இருக்கும். 'ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி' ஆடி மாதத்தில் உழவுப்பணிகளை மேற்கொள்கின்றனர். விவசாயத்திற்காக அதிக பணம் செலவாகிவிடும் எனவே திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் ஆடியில் திருமணங்களை நடத்துவதில்லை. ஆடியில சேதி மட்டும் சொல்லி விட்டு அடுத்த மாதமான ஆவணியில் பரிசம் போட்டு திருமணம் நடத்துகின்றனர்.
ஆடியில் தாய் வீடு: ஆடி மாதத்தில்தான் அம்மனே தவமாய் தவமிருந்து இறைவனோடு இணைந்தார். இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல என்றும் காலமெல்லாம் இணை பிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக என்றும் கூறப்படுகிறது. புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும். மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் செல்கின்றனர் .
புது வீடு குடிபோகக்கூடாது: " ஆடித்திங்கள் ராவணன் பட்டதும். ஆலமேய்பேறும்பாரத மார்கழி. வீடிட்டான் புரட்டாசி இரணியன். மேவிய ஈசன் நஞ்சு உண்டது மாசியில். படிக்காமெரிந்தது பங்குனி . பாருக்குள்ளேகினன்மாபலி ஆனியில் வீடிட்டில்லங்ட்டில்லங்குடிவேண்டினேர்ஓடிட்டேஇரந்து ண்பருலகிலே" என்கிறது பழம்பாடல். ஆனி மாதத்தில் மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் நிகழ்ந்தது. ஆடி மாதத்தில் இராவண சம்ஹாரம் நடந்தது. மார்கழி மாதத்தில் பாரத போர் நடந்தது. புரட்டாசி மாதத்தில் இரணிய சம்ஹாரம் நடந்தது. மாசி மாதத்தில் பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது. மன்மதனை சிவ பெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் நிகழ்ந்தது பங்குனி மாதத்தில் நடந்தது என்று கூறப்படுவதால் இந்த மாதங்களில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனர்.
வாஸ்து செய்யும் நாள்: ஆடி மாதத்தில் நிலம் வாங்க அட்வான்ஸ் தரலாம். புது வீடு பார்த்து வாங்குவதற்கு அட்வான்ஸ் தரலாம் என்றும் கூறுகின்றனர். ஆடி மாதத்தில் வாஸ்து நாளில் புது வீடு பால் காய்ச்சலாம். அதே போல ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் நிலம் சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம்.
இன்றைய கால கட்டத்தில் ஆடி மாதத்தில் சிலர் வீடு பால் காய்ச்சுகின்றனர். திடீரென வேலையில் இடமாற்றம் கிடைத்தவர்கள் வேறு வழியில்லை என்றால் வீடு பார்த்து பால் காய்ச்சுகின்றனர். காரணம் இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்வதால் வீடு பால் காய்ச்சுவதில் தவறில்லை என்கின்றனர்.
என்ன செய்யக்கூடாது: புது வீடு கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் வைத்துக்கொள்ளலாம். லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது என்பது ஜோதிட விதி. அதே நேரத்தில் அரை குறையாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு கிரக பிரவேசம் நடத்துவதை தவிர்ப்பது நல்லது. அமிர்த யோகம் காலத்தில் கிரகப்பிரவேசம் செய்வது நல்லது. வீட்டின் உரிமையாளர் குடி போக விரும்பும் மாதத்தில் பிறந்தவர் என்றால், அந்த மாதத்தில் குடி போகக்கூடாது. சந்திராஷ்டமம், கரி நாளிலும் சுப காரியங்கள் செய்யக்கூடாது. வீடு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருவதனால் புது வீடு கிரகப்பிரவேசம் செய்பவர்கள் தங்களின் சுய ஜாதகத்தில் ஆராய்ந்து புது வீடு குடி போவது நல்லது.












Click it and Unblock the Notifications