ஐயப்பனுக்கு பிறந்தநாள்.. பங்குனி உத்திர விழா.. மீன மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
சென்னை: மீன மாத பூஜைக்காகவும் ஐயப்பனின் அவதார தினமான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பங்குனி விழா வரும் 16 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 10 ஆம் நாள் திருவிழாவின் போது ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையாக பம்பையில் ஆரட்டு விழா நடைபெறும்.
உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் அருள்பாலிக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.

இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள். அதன்படி பங்குனி மாதம் மற்றும் ஐயப்பன் அவதார தினமான பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று 13 ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதரி நடையை திறந்து வைத்து தீப ஆராதனை காட்டுவார்.
நாளை 14 ஆம் தேதி முதல் வழக்கமாக சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினசரி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
பங்குனி உத்திர திருவிழா வரும் 16 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பத்து நாட்கள் வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இவ்விழாவின் போது கூடுதல் சிறப்பாக உத்சவ பூஜை நடத்தப்படுகிறது. 10 ஆம் நாள் திருவிழாவின் போது ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையாக பம்பையில் ஆரட்டு விழா நடைபெறும். வரும் 25 ஆம் தேதி மாலை கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெரும்.
அதனை தொடர்ந்து வழக்கமான இரவு பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு செய்து வருகிறது.
பங்குனி உத்திர நாள்தான் ஐயப்ப ஸ்வாமி அவதரித்த தினம் என்பதால், இந்த நாளில் காலை முதல் இரவு வரை, ஐயப்ப ஸ்வாமி குடிகொண்டிருக்கும் சாஸ்தா ஆலயங்களில், சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். சபரிமலை நாதன், சபரிகிரிவாசன், ஐயப்ப சுவாமி என்றெல்லாம் அழைக்கப்படும் ஐயப்ப சுவாமிக்கு சாஸ்தா என்றும் பெயர் உண்டு. மணிகண்ட சுவாமியாக அவதரித்தார் என்கிறது புராணம். மேலும் சபரிமலை ஸ்தல புராணமும் பங்குனி உத்திரத்தையும் அதன் மகிமையையும் விவரித்துள்ளது.
ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம் உத்திரம். எனவே, மாதந்தோறும் உத்திர நட்சத்திர நன்னாளில், ஐயப்ப சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் பங்கேற்று ஐயப்பனை தரிசனம் செய்தால் தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சபரிமலையில் நடைபெறும் பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications