கோடை விடுமுறை..திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவியும் கூட்டம்..3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது . தரிசனத்திற்காக பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருப்பதால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மூன்று நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலைக்கு செல்லும் ஸ்ரீவாரி பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. சிறப்பு தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். இலவச தரிசனத்திற்கு செல்ல ஒரு நாள் முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும். கடந்த 2 நாட்களாக பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் இலவச தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், 36 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி செல்லும் பக்தர்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து விடுகின்றனர். விரைவு தரிசனம் செய்ய ஆன்லைனில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் புக் செய்ய முடியாதவர்கள் சிரமப்படுவார்கள். ஆன்லைனில் போட்ட சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடும். இந்த டிக்கெட்டுகளை பெற முடியாதவர்கள் திருமலைக்குச் சென்று நேர ஸ்லாட் சர்வ தரிசன டிக்கெட்டுகளையும் நேரடியாகப் பெறலாம். ஆனால் இதற்கும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஆகும்.
ஆனால் எந்த சிரமமும் இல்லாமல் எளிதாகவும் விரைவாகவும் திருமலை ஏழுமலையானை தரிசிக்க வழி இருக்கிறது. ஆர்டிசி பஸ்களில் திருப்பதி சென்றால் பஸ் டிக்கெட்டுடன் ஏழுமலையானை தரிசிக்கும் தரிசன டிக்கெட்டுகளும் கிடைக்கும். APSRTC ( Andhra Pradesh State Road Transport Corporation) உடன் TSRTC ( Telangana State Road Transport Corporation) யும் இந்த டிக்கெட்டுகளை வழங்குகிறது.
தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு TSRTC பேருந்துகளை இயக்குகிறது. அதில், தினமும் 1000 பயணிகளுக்கு ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும். பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருப்பதி பாலாஜி இணையதளம் அல்லது TT தேவஸ்தானம் செயலி மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெற வேண்டுமானால், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். TSRTC (Telangana State Road Transport Corporation) மூலம் பெற வேண்டுமானால் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு முன் பதிவு செய்தால் போதுமானது.

பக்தர்களுக்காக திருப்பதிக்கு வசதியான பேருந்துகளை இயக்குவதாக TSRTC தெரிவித்துள்ளது. திருமலை செல்லும் பக்தர்கள். ஆர்டிசி டிக்கெட் ரூ.300 ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் www.tsrtconline.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் சாதாரண மக்களின் தரிசனத்திற்காக விஐபி பிரேக் தரிசனத்தை 3 நாட்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. நேற்று ஒரே நாளில் 79, 207 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக மூன்று கோடியே 19 லட்சம் ரூபாயை செலுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications