மே மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யப்போறீங்களா?.. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ரிலீஸ்
திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதத்தில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உலகம் முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். சராசரியாக நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மாதம்தோறும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்து வருகிறது.

நாள்தோறும் இலவச தரிசனம், இலவச டைம் ஸ்லாட், விஐபி பிரேக் தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், சுபதம் தரிசனம் என பல்வேறு தரிசனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தும் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கடந்த 19ஆம் தேதி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தொடங்க உள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணுவாசம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்களுக்கான அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பத்மாவதி விருந்தினர் மாளிகை, வெங்கடேஸ்வரா விருந்தினர் மாளிகை, ராம் பகீச்சா வராஹஸ்வாமி ஓய்வு இல்லம், டிராவலர்ஸ் பங்களா, நாராயணகிரி விருந்தினர் மாளிகை, நந்தகம், பாஞ்சஜன்யம், கௌஸ்துபம், வகுல்மாதா, சப்தகிரி குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவையும் திருமலையில் உள்ளன.
மே மாதம் திருமலையில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தங்களுடைய பெயர்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
அன்று மதியம் 12 மணி முதல் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும், பகல் 1 மணி முதல் உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும் தங்கள் பெயர்களை தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.Ap.Gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் விடுமுறை காலம் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்வது நல்லது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications