இறந்தவரின் தாலியை! "ஜென்டில்மேன்" ஹீரோ அர்ஜுன் போல் மோதிரமாக அணியலாமா?
சென்னை: இறந்தவர்களின் தாலியை அவர்களுடைய மகளோ மருமகளோ அல்லது வேறு பெண்களோ பயன்படுத்தலாமா? அப்படி செய்தால் என்னென்ன விளைவுகள் நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருமாங்கல்யம் என்பது எப்போதும் பெண்களால் முக்கியத்துவம் தரப்படும் புனிதமான ஒன்று. இதை வெறும் கயிறாகவோ நம் உயிரில் கலந்த ஒன்றாகவோ பார்ப்பது அவரவர் மனதை பொருத்ததாகும்.

தாலியை கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு வேலைக்கு செல்வோரும் இருக்கிறார்கள். அதே தாலிக்கு தினமும் பொட்டு வைத்து கண்களில் ஒற்றிக் கொள்வோரும் இருக்கிறார்கள். மேலும் இதை ஒரு ஆபரணமாக பார்க்கப்படக் கூடாது.
இது உணர்வு சம்பந்தப்பட்டது. மேலும் தெய்வீக உணர்வுடன் இரண்டறக் கலந்து பார்க்கப்படுவது என்பதாகும். திருமாங்கல்யத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். அந்த காலத்தில் தாழை பனை மரத்தில் தாலி செய்து போட்டுக் கொண்டனர்.
இதனால்தான் இதற்கு தாலி என பெயர் வந்ததாகவும் ஒரு சாரார் கூறுகிறார்கள். மேலும் ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை வைத்தும் தாலி கட்டும் வழக்கம் இருந்தது. இது மெல்ல நாளடைவில் அவரவர் வழக்கத்திற்கென ஒரு தாலி என வந்தது.
அதை மஞ்சள் கயிற்றில் கட்டிக் கொண்டனர். மேலும் அத்துடன் சில உருப்படிகளையும் சேர்த்துக் கொண்டனர். பின்னர் தற்போது பலர் மஞ்சள் கயிற்றுக்கு அவ்வப்போது மஞ்சள் தேய்த்து பராமரிக்க முடியவில்லை என்பதால் தங்கத்தால் ஆன சரடை கயிற்றில் கோர்த்து போட்டுக் கொள்கிறார்கள்.
தாலி அணிந்து கொண்டிருந்த பெண் இறந்துவிட்டால் அந்த தாலி யாருக்கு சொந்தம் என்பது குறித்து நமக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இறந்து போன பெண்ணின் தாலி என்பது அவருடைய மகள் இருக்கும் போது அந்த தாலி மகளுக்குத்தான் சேர வேண்டும்.
ஒரு வேளை இறந்தவருக்கு மகளே இல்லாவிட்டால் மகனுக்கு போய் அது மருமகளுக்கு போய் சேர வேண்டும். எல்லாம் சரி! அந்த மகளோ மருமகளோ இறந்தவரின் தாலியை தாலியாகவே பயன்படுத்தலாமா என்றால் கூடவே கூடாது.
தாலியையே மோதிரமாகவும் சிலர் அணிந்து கொள்வார்கள். ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் அணிந்திருப்பாரே! அப்படித்தான்! ஆனால் இப்படியும் அணியக் கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறந்தவரின் திருமாங்கல்யத்தில் உள்ள தங்கத்தை உருக்கி அதை வேறு விதமாக , அதாவது வேறு நகையாக செய்து கொள்ளலாம்.
இல்லாவிட்டால் புதிதாக திருமாங்கல்யம் செய்யும் போது கூட அந்த தங்கத்துடன் இந்த தங்கத்தை உருக்கி கலந்து கொள்ளலாம். திருமாங்கல்யம் என்பது குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டது. இதை உருக்கி வேறு நகையாக அணிந்து கொள்ளலாம்.
இப்படி செய்துவிட்டால் சுக்கிரனின் ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் இல்லாமல் போகுமா என்றால் போகாது. பித்ருவான இறந்தவரின் தாலியை வேறு ஒரு ஆபரணமாக அணியும் போது அவர்களுடைய பரிபூரண அருளும் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications