ஊசி தேவையில்லை.. சில நொடிகளில் ரத்த பரிசோதனை முடிவுகளை பார்க்கலாம்.. இந்தியாவிலேயே முதல் AI கருவி!
ஹைதராபாத்: இந்தியாவின் முதல் AI அடிப்படையிலான ரத்த பரிசோதனை மையம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ கருவி மூலம் சில விநாடிகளில் ஊசி இல்லாமல் ரத்த பரிசோதனைகளைச் செய்ய முடியும். செல்ஃபி எடுப்பது போல எளிதாக ரத்த பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளையும் ஆட்டிப் படைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு மருத்துவத் துறையையும் விட்டுவைக்கவில்லை. மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் நாள்தோறும் புதிய பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ஹைதராபாத்தில் உள்ள நிலூஃபர் மருத்துவமனை, ஊசிகள், அல்லது ஆய்வக தாமதங்கள் இல்லாமல் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் ரத்த பரிசோதனையை நடத்தும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நோயறிதல் கருவியை அறிமுகம் செய்துள்ளது.
மருத்துவத் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான குயிக் வைட்டல்ஸ் எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அம்ருத் ஸ்வஸ்த் பாரத் என்ற இந்த ஏஐ கருவி, மேம்பட்ட ஃபேஸ் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 முதல் 60 வினாடிகளில் ஒரு சொட்டு ரத்தம் கூட தேவையில்லாமல் ரத்தப் பரிசோதனை முடிவுகளை வழங்குகிறது.
வழக்கமான ரத்த பரிசோதனைகளைப் போல இல்லாமல், அம்ருத் ஸ்வஸ்த் பாரத் கருவி, ஃபோட்டோ பிளெதிஸ்மோ கிராஃபி (PPG) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது தோல் வழியாக ஒளி உறிஞ்சுதலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து, முக்கியமான உடல் ரத்த அளவுகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுகிறது.
இரத்த அழுத்தம்
ஆக்ஸிஜன் செறிவு (SpO2)
இதய துடிப்பு
சுவாச வீதம்
இதய துடிப்பு மாறுபாடு (HRV)
ஹீமோகுளோபின் A1c
மன அழுத்த நிலைகள்
துடிப்பு சுவாச அளவு (PRQ)
பாராசிம்பேடிக் நரம்பு மண்டல செயல்பாடுகள் ஆகியவற்றை கண்டறிய இந்த ஏஐ கருவி பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ ஆய்வகப் பணியாளர்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் கேமராவைப் பயன்படுத்தி உடனடியாக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.
இந்த தொழில்நுட்பம் பற்றி விளக்கிய குயிக் வைட்டல்ஸ் நிறுவனர் ஹரிஷ் பிசாம், "இந்த செயலியின் மூலம், ரத்த பரிசோதனை என்பது செல்ஃபி எடுப்பது போல எளிமையாகிவிட்டது. எங்கள் மொபைல் ஃபேஸ் ஸ்கேனிங் அமைப்பு ஒரு நிமிடத்திற்குள் அத்தியாவசிய மருத்துவ டேட்டாவை பெற உதவுகிறது. இது சுகாதார அணுகலில், குறிப்பாக பின்தங்கிய சமூகங்களில் இருக்கும் இடைவெளிகளைக் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
பெரிய அளவிலான மருத்துவப் பரிசோதனைகளில் , குறிப்பாக ஆய்வகங்கள் அதிகம் இல்லாத கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறப் பகுதிகளில், இந்த எளிதான முறை மிக முக்கியமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் சரியான நேரத்திற்குள் நோயைக் கண்டறியவும் வேகமான இந்த முறை உதவும் எனத் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications