சாமானியர்களை வச்சு பிக் பாஸ் நடத்தலாமே.. மக்களுக்கு கத்துக்க நிறைய கிடைக்குமே!
சென்னை: மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி. மக்களால் மற்றவர்களின் நலனுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
மாற்றம் என்பதும் ஏமாற்றம் என்பதும் நம்மிடம் இருந்தே உருவாகிறது. மாற்றம் ஏற்பட நம்மை நாமே செதுக்க வேண்டும். ஏமாற்றம் என்பது மற்றவர்களுக்காக நம்மை நாமே அழித்துக் கொள்வது. இதில் நாம் ஏமாற்றப்பட்டு மட்டுமே இருக்கிறோம்.
நம்மை நாம் செப்பனிட நேரம் ஒதுக்காத நாம் யாருக்காகவோ நேரத்தை செலவு செய்து அவர்களுக்காக நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்கிறோம்.
நமக்காக நாம் மட்டுமே
நாம் எவ்வாறு வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்று யோசித்துப் பார்த்தால் யாரும் நமக்காக பாடு பட போவதில்லை. நாம் மட்டுமே நமக்காக போராட வேண்டும். இதில் மற்றவரின் வெற்றிக்காக நம்மில் பல மணி நேரத்தை செலவழித்து நமது நோக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஐந்து நிமிடம் ஆனாலும் அதில் நமக்கு என்ன லாபம் என்பதில் கவனம் தேவை.
அர்ப்பணிப்பு எங்கே
இதில் ஒரு மணி நேரம் கிடைத்தால், அது நம் திறமைக்கு கிடைத்த பொக்கிஷம். நமக்காக ஒரு மணிநேரம் என்றாவது ஒதுக்கி இருப்போமா? நம்மை பற்றி சிந்தித்து இருப்போமா? நம் திறமை என்னவென்று ஆராய்ந்து இருப்போமா? நிச்சயமாக முழுமையாக நாம் நமக்காக இந்த அர்ப்பணிப்பு செய்யத் தவறி விடுகிறோம்.
நம்மை முட்டாளாக்கி
மற்றவரின் நலனுக்காக நம்மை முட்டாளாக்கி அதில் குளிர்காயும் முதலாளித்துவத்திற்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் சராசரி மனிதராக இருந்து விடுகிறோம். ஒரு கேள்வி மட்டும் அனைவரும் கேட்டுப்பாருங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் பிரபலமானவர்கள் இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?
கவனம் பணம் பிரபலம்
அன்றாடம் நம்மைச் சுற்றி ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி மக்களின் பார்வை முழுவதும் நிகழ்ச்சியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீட்டப்படுகிறது. சாதாரண மனிதனை போட்டியாளராக கொண்டுவர நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு தைரியம் கிடையாது. அவர்களின் தேவை மக்களின் கவனம். மக்களின் கவனம் → பணம் → பிரபலம். இதுதான் உள்நோக்கம்.
ஜீரோதான்
இதில் மக்கள் இல்லையென்றால் நிகழ்ச்சி ஜீரோ தான். 16 போட்டியாளர்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் விருப்பத்தோடு கலந்து கொள்ளச் செய்யுங்கள், குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள். தினக்கூலி செய்யும் தொழிலாளர்களை அழைத்து வாருங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். நாட்டை பாதுகாக்க உயிர்நீத்த குடும்பத்தில் ஒருவரைக் கொண்டு வாருங்கள். சாதாரண மனிதர்கள் போட்டியாளர்களாக இருக்கும்பட்சத்தில் சமூகத்தில் சில பிரச்சனைகள் களையப்படும்.
லாபம் இல்லை
எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அதில் நமக்கு பொழுதுபோக்கு மட்டுமே தவிர லாபம் ஏதுமில்லை அடுத்தவரின் நடவடிக்கைகளை,வெளி உலகத் தோற்றம், உள் தோற்றம் ,என்று அடுத்தவரைப் பற்றி அதிகமாக யோசித்தும், விமர்சித்தும் நம்மில் பலர் நம் பொன்னான பொழுதை தேவையில்லாமல் கழிக்கிறோம். நம்மைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் பல வகையான திறமைகள் நம்மில் இருப்பதை கண்டு கொள்ளலாம்.
இதுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்குது
எதற்கும் நேரமில்லை என்பவர்கள் கூட இதற்கு மட்டும் நேரம் ஒதுக்குகின்றனர். ஆக எல்லோராலும் நேரம் என்பது ஒதுக்க முடியும். ஆனால் அது எதற்காக என்பதை பொறுத்தே அமைகிறது.அடுத்தவர்களுக்காக நமது நேரத்தையும், பணியையும் ஒதுக்கும் நாம் நமக்காக செய்ய முன்வருவதில்லை. ஒரு மணி நேரம் வீட்டில் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது குழந்தைக்கோ உதவி செய்யலாம், அதில் ஒரு புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒதுக்குங்கள்
தந்தையும் தாயும் கேட்பது உங்களின் பொன்னான நேரம் மட்டுமே எப்பொழுதுமே தொலைபேசியிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளிலோ மூழ்கியிருக்கும் மகனோ மகளோ தந்தை தாயின் எதிர் பார்ப்பு கூட நிவர்த்தி செய்ய முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் நாம் நம் வீட்டின் பிரச்சினைகளையும் தேவைகளையும் கண்டுகொள்வதில்லை. இதுவும் ஒரு வகையான போதைதான், நம் மூளையை சலவை செய்து, நம்மை அடிமையாக்கி, ஒருமணிநேரம் டிவி முன்பே உட்கார வைத்து, அதில் அவர்கள் லாபம் காணும் களம்.
நமக்குத்தான் இழப்பு
இதில் நாம் இழப்பது நம் நேரம், உறவுகள், நம் திறமைகள். நிகழ்ச்சியில் பிரபலமடைந்த நபரை வைத்தே அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது காரணம் மக்களின் கவனத்தை ஈர்த்து அதில் பணம் பெற வேண்டும் என்பதே. பிரபலமானவர் மென்மேலும் பிரபலம் அடைகின்றனர் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் நிலைமை மாற , யாரும் அறியப்படாத நபர்களாகவே இருந்து விடுகிறோம்.
நமக்கு ஏமாற்றம்தான்
மாற்றங்களை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு ஏமாற்றத்தை மட்டுமே கையில் ஏந்திக் கொண்டு மற்றவர்களின் விசிறிகள் ஆகவே இருந்து விடுகிறோம். மாற்றத்தை கொண்டு வாருங்கள், இல்லையேல் ஏமாற்றத்தோடு வாழ்ந்துவிட்டு, ஏற்றம் இல்லாத வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். யோசிச்சு செயல் படுங்க.
- காயத்ரி