சாய் பல்லவியின் "பசு அரசியல்".. ஓவரா சூடாகுதே இணையம்? அதைவிடுங்க, டெல்லியில் நெகிழ்ச்சி, வீர சல்யூட்
சென்னை: சாய் பல்லவியின் வீர வணக்கம் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வரும்நிலையில், அவருக்கு எதிரான முழக்கங்களும் இணையத்தில் வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன. அமரன் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த எதிர்ப்பு பதிவுகள் பெருத்த கவனத்தை பெற்று வருகின்றன.
நடிகை சாய் பல்லவி நடித்த "அமரன்" படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையின் கருவை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தின் புரமோஷன்கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன..

போர்க்கொடி: இந்நிலையில், நடிகை சாய் பல்லவிக்கு எதிராக சிலர் இணையத்தில் திரண்டெழுந்து, அமரன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.
காரணம், கடந்த 2022-ல் "விராத பர்வம்" என்ற படத்தில் நடித்தபோது, சாய் பல்லவி பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், "எனக்கு வன்முறை வழியில் நம்பிக்கையில்லை. காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்பட்டதைக் காட்டியிருப்பார்கள்...
பயங்கரவாதம்: அது பயங்கரவாதம் என்றால், கொரோனாவின்போது பசுவை அழைத்துச் சென்ற இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டது மட்டும் சரியா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? மனிதர்கள் அனைவரும் சமம்தான். ஜாதி, மதத்தால் பிரிப்பது சரியானதல்ல" என்று கூறியிருந்தார்.
சாய்பல்லவிக்கு, சிலர்கடுமையான எதிர்ப்புகளை கூறி, கோர்ட் வரை சென்று வழக்கு தொடுத்தார்கள்.. அப்போதும் சாய் பல்லவி, தன்னுடைய பேச்சு தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் கூறி தெரிவித்திருந்தார். அவர் அளித்த விளக்கத்தில், "எல்லா மனிதர்களும் ஒன்றுதான். அவர்களை சாதி, மதம், இனத்தால் பிரிப்பது சரியானது கிடையாது என்பதைத்தான் அந்த நேர்காணலில் கூறியிருந்தேன்" என்றார்.
ஆவேச பதிவு: எனினும், அந்த விளக்கத்தை ஏற்காத சிலர், பழைய நேர்காணலில் குறிப்பிட்ட ஜெய் ஸ்ரீராம் விஷயத்தை, இப்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்.. அத்துடன் "ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுக்கும் நீங்கள், எதுக்காக ராமாயணா படத்தில் சீதா தேவியாக நடிக்க வேண்டும்"? என்று கேட்டு, அமரன் படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என்று ஆவேசமாக பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று வீர வணக்கம் செலுத்தியுள்ளார் சாய் பல்லவி. இதுகுறித்து போட்டோக்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்திருந்த சாய் பல்லவி "அமரன்' படத்திற்கான புரமோஷனை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தேசிய போர் நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன்.
வீர வணக்கம்: சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றேன். நமக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக இந்த புனிதமான கோவிலில் ஆயிரக்கணக்கான "செங்கல் போன்ற மாத்திரைகள்" உள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம்சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் உணர்ச்சிகளால் நிறைந்திருந்தேன். நன்றி மற்றும் வீர வணக்கங்கள்," என்று பதிவிட்டுள்ளார்.
#BoycottSaiPallavi என்ற ஹேஷ்டேக், இணையத்தில் நேற்றிலிருந்து டிரெண்டாகி வருகிறது.. அதேசமயம் சாய் பல்லவிக்கு ஆதரவாகவும் பலர் பேசிவருகிறார்கள்.. மதவாத எண்ணம் குறித்துதான் சாய் பல்லவி பேசியிருப்பதாகவும், இந்திய ராணுவத்தை அவர் தவறாக எதுவுமே பேசவில்லை, அப்படியிருக்கும்போது, அமரன் படத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.











Click it and Unblock the Notifications