கேரள நடிகை பலாத்காரம்.. நடிகர் திலீப் வழக்கில் டிசம்பர் 8 ஆம் தேதி தீர்ப்பு
எர்ணாகுளம் கேரளா மாநிலம் கொச்சி அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இதில் பிரபல நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி இதன் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது திலீப் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் பிரபல நடிகை கடந்த 2017 பிப்ரவரி மாதம், திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் நடிகையின் காரில் மோதியது. நடிகை சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் நடிகையின் காரில் ஏறி தேசிய நெடுஞ்சாலை நோக்கி இயக்கியுள்ளனர். அப்போது அந்த கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

நடிகை வழக்கில் திலீப்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை எர்ணாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல்சர் சுனி என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். தொடர்ந்து காவல்துறையினர் சுனி உள்ளிட்ட 7 பேரை கைது செய்திருந்தனர். நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்து, அதை வீடியோவாக எடுத்து பிளாக் மெயில் செய்வது தான் திட்டம். என்று அவர்கள் கூறியுள்ளனர்
திடீர் திருப்பமாக இந்த வழக்கில் நடிகர் திலீப் பெயர் அடிப்பட்டது. நடிகையுடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக திலீப் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக தகவல் வெளியானது. சுனி, திலீப் உரையாடல் தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன. அதனடிப்படையில் காவல்துறையினர் நடிகர் திலீப்பை கைது செய்தனர். சுமார் 85 நாட்கள் அவர் சிறையில் இருந்து, பிறகு ஜாமீனில் வெளியானார்.
இறுதி தீர்ப்பு
இந்த வழக்கை எர்ணாகுளம் முதன்மை செஸன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திலீப் 8வது குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க திலீப் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக ஆடியோ வெளியானது. கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில இந்த வழக்கில் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications