கோழிக்கோடு ரயிலில் தீ வைத்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு! பக்கா ஸ்கெட்ச்! பயங்கரவாத சதியா?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயிலில் நடந்த தகராறில் ரயிலுக்கு தீ வைத்த நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
ஆலப்புழா- கண்ணூர் விரைவு ரயில் கோழிக்கோடு மாவட்டம், எலத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 9.37 மணிக்கு டி1 கோச்சில் பயணம் செய்த பெண் உள்பட பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார்.
இதை பார்த்த மற்ற பயணிகள் ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனே சிறிது நேரத்தில் அந்த நபர் வெளியே குதித்து தப்பி ஓடியதாக தெரிகிறது. அந்த பெட்டியில் தீ கொழுந்துவிட்டு எரிவதை பார்த்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். தொடர்ந்து ரயில்வே போலீஸார் மற்றும் எலத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

9 பேர் காயம்
இந்த விபத்தில் 9 பேர் தீக்காயமடைந்தனர். அவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ஏடிஜிபி, கோழிக்கோடு மேயர் உள்ளிட்டோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

கொல்ல முயற்சியா
பெண் மீது தாக்குதல் நடத்தி கொல்ல முயற்சியா இல்லை ரயிலை விபத்தில் சிக்க வைக்க சதி திட்டமா என போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். சக பயணிகளிடம் கேட்ட போது ரயிலில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட தகராறின்பேரில் அந்த மர்மநபர் ரயில் பெட்டிக்கு தீ வைத்தார் என கூறுகிறார்கள். இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

3 பேர் சடலம்
ஒரு ஆண், பெண், ஒரு வயது குழந்தை ஆகியோரின் சடலம் காணப்பட்டது. இவர்கள் தீவிபத்தில் இருந்து தப்பிக்க ரயிலில் இருந்து குதித்ததாக தெரிகிறது. இந்த நிகழ்வின் சிசிடிவி காட்சிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. ரயிலில் தீ வைத்து கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிய மர்ம நபர் சிகப்பு மற்றும் கருப்பு நிற கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார்.

கருப்பு பேண்ட்
கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். அவர் யாரிடமோ செல்போனில் பேசியபடி இருந்தார். அவரை ஒருவர் பைக்கில் அழைத்து சென்றார். அந்த நபர் தோளில் ஒரு பையையும் மாட்டியிருந்தார். இந்த சிசிடிவி காட்சிகள் எலத்தூர் ரயில்நிலையம் அருகே உள்ள மசூதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யார் அந்த நபர்
மேலும் சந்தேகிக்கப்படும் நபர் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்த ரஷீக் எனும் பயணியிடம் அவர் எப்படி இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் சொல்லும் அடையாளங்களை வைத்து மர்ம நபர் குறித்து படம் வரையப்படும் என தெரிகிறது. இந்த சம்பவத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. இவர் பக்காவாக பைக்கில் தப்பி செல்வதை பார்க்கும் போது ஏதேச்சையாக நடந்தது போல் இல்லை என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications