நாட்டையே உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கு: ஜூஸில் விஷம்.. குற்றவாளி கிரீஷ்மா! இன்று தண்டனை அறிவிப்பு
திருவனந்தபுரம்: காதலனுக்கு குளிர்பானம் மற்றும் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் அவரது மாமா ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது நீதிமன்றம்.
கன்னியாகுமரியை ஒட்டிய கேரள மாநிலப் பகுதியில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த இளைஞரான ஷரோன் ராஜ், கேரளாவை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். அந்தப் பெண், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், இருவரும் காதலித்து ஒன்றாகச் சுற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஷரோன் ராஜ் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ஷாரோன் ராஜின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
கிரீஷ்மா தான், ஷாரோன் ராஜை தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயம் எனக் கூறி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. கிரீஷ்மா தன் வீட்டில் பார்த்த ராணுவ வீரரை திருமணம் செய்ய நினைத்துள்ளார். அதற்கு இடையூறாக இருப்பார் என நினைத்து தனது காதலன் ஷரோன் ராஜாவை தன் வீட்டிற்கு வரவழைத்து, ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் கூறியதாலும் ஜூஸ் பாட்டிலில் விஷம் கலந்து ஷாரோனுக்கு கொடுத்து கொலை செய்துள்ளார் கிரீஷ்மா என்பதும் அம்பலமானது. இதையடுத்து கிரீஷ்மா, அவரது தாய் மற்றும் மாமா நிர்மல்குமாரன் நாயர் ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கேரளாவின் நெய்யாற்றின்கரையில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கிக் கொடுத்த அவரது தாய்மாமா நிர்மல் குமாரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தது.
"இந்த கொலை வழக்கில் கிரீஷ்மாதான் முக்கியக் குற்றவாளி. பழரசத்தில் கலந்து கொடுத்த விஷத்தை வாங்கி வந்த கிரீஷ்மாவின் மாமாவான நிர்மல் குமாரன் நாயர் இரண்டாவது குற்றவாளி" என்று தீர்பளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கிரீஷ்மாவின் தாயார் சிந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று (ஜனவரி 18) வெளியிடப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications