கேரளாவில் "நேட்டிவிட்டி கார்டு.." பினராயி போட்ட அதிரடி உத்தரவு.. பாய்ந்து வரும் பாஜக! என்ன மேட்டர்
திருவனந்தபுரம்: கேரளாவில் இப்போது வழங்கப்படும் வசிப்பிடச் சான்றிதழுக்குப் பதிலாக நேட்டிவிட்டி கார்டு வழங்கக் கேரள அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இறுக்கும் வசிப்பிடச் சான்றிதழுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத நிலையில், நிரந்தரச் சட்ட ஆவணமாகச் செயல்படும் வகையில் நேட்டிவிட்டி சான்றிதழைக் கேரள அரசு கொண்டு வந்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் அம்மாநில அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது அங்கு தற்போது நடைமுறையில் உள்ள வசிப்பிடச் சான்றிதழை மாற்றி, நிரந்தரமான, புகைப்படத்துடன் கூடிய'நேட்டிவிட்டி கார்டு' (Nativity Card) என்பதை வழங்க அம்மாநில அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரனாயி விஜயன் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

நேட்டிவிட்டி சான்றிதழ்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "கேரளாவில் ஒருவர் நீண்ட காலம் வசிக்கும்போது அவர் மீண்டும் மீண்டும் தனது அடையாளம், பிறப்பு அல்லது வசிப்பிடத்தை நிரூபிக்க வேண்டிய அவசியத்தைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். அரசுத் திட்டத்தின் பயன்களைப் பெற மக்கள் தங்களின் இருப்பை நிரூபிக்கச் சிரமப்படும் நிலை கவலையளிக்கிறது. இந்தப் பிரச்சினையைச் சரி செய்யவே சட்டப்பூர்வமான அங்கீகாரத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ ஆவணத்தை உருவாக்க உள்ளோம்.
ஏன் இந்த முடிவு
தற்போது வழங்கப்படும் வசிப்பிடச் சான்றிதழ் ஒரு மாநிலத்தில் பிறப்பு மற்றும் நீண்டகால வசிப்பிடத்தை உறுதிப்படுத்தினாலும், அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை. இதனால் பல்வேறு தேவைகளுக்காக அதைப் பலமுறை பெற வேண்டியுள்ளது.. இந்த முறையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வந்தனர். அதைத் தொடர்ந்தே போட்டோ உடன் கூடிய நேட்டிவிட்டி கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
அடையாள அட்டை போல
புதிய திட்டத்தின்படி, இந்த நேட்டிவிட்டி கார்டு, அரசு சேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இது வசிப்பிடச் சான்றிதழுக்குப் பதிலாக நிரந்தரமாகப் பயன்படுத்தக்கூடிய சட்டப்பூர்வமான ஆவணமாகச் செயல்படும். இது அமலுக்கு வந்த பிறகு, அரசு நலத்திட்டங்களுக்கான பயனாளி அடையாள ஆவணமாகவும் இது செயல்படும்.
இந்த நேட்டிவிட்டி கார்டுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கச் சட்டத்துறையுடன் கலந்தாலோசித்து ஒரு சட்ட வரைவைத் தயாரிக்குமாறு வருவாய்த்துறைக்குக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்கு இந்த நேட்டிவிட்டி சான்றிதழ்களைத் தரும் பணிகளைத் தாசில்தார்கள் கவனிப்பார்கள் என முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்தார்.
கொந்தளிக்கும் பாஜக
கேரள அரசின் இந்த நடவடிக்கையை ஒரு தரப்பினர் வரவேற்றனர். இருப்பினும், மற்றொரு தரப்பினர் இந்த உத்தரவுக்குத் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். குறிப்பாக பாஜக இதை ஆபத்தான பிரிவினைவாத அரசியல் என கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாகக் கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், "கேரளாவில் வசிப்போருக்கு இந்த நேட்டிவிட்டி கார்டு வழங்குவார்களாம். இது குறித்து யாருமே கோரிக்கை வைக்காத போது கேரள அரசு ஏன் இந்த முடிவை எடுக்கிறது. நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்வோம்.
மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கக் கேரள அரசு முயல்கிறது. அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி சந்தித்த பின்னடைவில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications