அப்படிப்போடு.. ஸ்கூல் இருக்கு.. ஆனா புத்தகம் இல்லை.. மாணவர்களுக்கு கேரள அரசு சர்ப்ரைஸ்
திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு வர வேண்டாம் என்று அந்த மாநில அரசு கூறியுள்ளது. அதற்கு பதிலாக முதல் 2 வாரங்கள் சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறவுள்ளன.
கோடை விடுமுறையின் இறுதியில் இருக்கிறோம். இரண்டு வாரங்களில் கோடை விடுமுறை நிறைவடைய போகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதனிடையே கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிவிட்டார்.

இந்த வருடம் தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக வருகின்ற நாட்களில் வெயிலின் தாக்கம் கணிசமாக குறைந்து மழை பெய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கான அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நோட், புத்தகங்கள் ஆகியவற்றை விநியோகம் செய்துவிட்டனர். பள்ளி திறக்கும்போது மாணவர்கள் அனைத்து நோட், புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டும். புத்தக சுமை பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட அதிக சுமையை தூக்கி செல்கிறார்கள்.
சில மாணவர்கள் தங்கள் எடையில் மூன்றில் ஒரு பங்கு சுமையுடன் புத்தகங்களை தூக்கி செல்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு மற்ற அரசாங்கங்கள் அமைதியாக இருக்கும்போது, கேரளா அரசு கணிவுடன் அணுகி வருகிறது. ஏற்கனவே மாதத்தின் 4 நாட்கள் பள்ளிக்கு பேக் எடுத்து வர வேண்டாம் என்று கூறியிருந்தனர்.
மேலும், வகுப்பு வாரியாக ஸ்கூல் பேக் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பித்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2025-26 கல்வியாண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கேரள அரசு மாணவர்களின் மனம் குளிரும் வகையில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கேரளா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த பிறகு, முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் எதுவும் கொண்டு வர தேவையில்லை. வழக்கமான பாடங்களுக்கு பதிலாக, அந்த முதல் 2 வாரங்கள் சமூக பிரச்னைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகுப்புகள் நடைபெறும்." என்று கூறியுள்ளது.
"போதைப் பழக்கம், ஒழுக்கம், சுற்றுச்சூதுல், சட்டம், சமூகவலைதளத்தை எப்படி பயன்படுத்துவது, சுகாதாரம் ஆகியவை குறித்து வகுப்புகள் எடுக்கப்படும்" என்று கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் காவல்துறை, சுகாதாரம், குழந்தைகள் நல பாதுகாப்பு, சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வகுப்பு எடுக்கவுள்ளனர்.
கேரளாவில் ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை முதல் 2 வாரங்களுக்கு சமூக விழிப்புணர்வு வகுப்பு நடைபெறும். 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 18 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அவர்களுக்கு ஒரு வாரம் இந்த சமூக விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும். நாட்டிலேயே முதல்முறையாக அமல்படுத்தப்படும் கேரளா அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications