கேரளாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று! முககவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்றும், மருத்துவமனைகளுக்கு செல்லும்போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.
கடந்த மே.1ம் தேதி தொடங்கி இன்று வரை மொத்தம் 182 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறியுள்ள சுகாதாரத்துறை, தொற்று பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இன்று திருவனந்தபுரத்தில் விரைவு நடவடிக்கைக் குழுவின்(RRT) கூட்டத்தில் பங்கேற்றிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், முககவசம் பயன்பாடு பற்றிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மாநில அளவில் அதிகபட்சமாக கோட்டயம் மாவட்டத்தில் 57 பேரும், அதைத் தொடர்ந்து எர்ணாகுளத்தில் 34 பேரும், திருவனந்தபுரத்தில் 30 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொற்று பரவல் தீவிரம் எடுத்திருப்பதால், கேரளாவிலும் இனி வரும் நாட்களில் தொற்று வேகமாக பரவும் என்று சொல்லப்படுகிறது.
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலுக்கு ஓமிக்ரான் துணை வகைகளான JN.1, LF.7 மற்றும் NB 1.8 ஆகிய வைரஸ்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த தொற்று வேகமாக பரவி வந்தாலும், நோயின் தீவிரம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக அமைச்சர் வீணா தெரிவித்திருக்கிறார்.
மேலும் சளி, தொண்டை வலி, இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், RTPCR கருவிகள் மற்றும் பிற அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு, எலி காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் கேளரா எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications