16 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.. வெளிநாட்டில் இருந்து திரும்பியதும்.. தட்டி தூக்கிய கேரள போலீஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபர் 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பு செய்தால் எப்போதும் தப்பிக்க முடியாது என்பார்கள். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் செய்த தவறுக்கு ஒருவர் நிச்சயம் தண்டனையை அனுபவித்தே தீருவார்கள்.
அப்படியொரு சம்பவம் தான் கேரள மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கேரளா
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அடுத்துள்ள தோட்டக்கரா பகுதியில் வசித்து வரும் டேவிட் என்பவரது வீட்டில் கடந்த 2006இல் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க டேவிட் குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார். அப்போது பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 26.5 சவரன் தங்க நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றனர்.

16 ஆண்டுகள்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சம்பவத்தில் மொத்தம் 7 பேர் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அவர்களில் 6 பேரை போலீசார் அப்போதே கைது செய்துவிட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த 25 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இருப்பினும், இதில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ்குமார் என்பவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

தப்பியோட்டம்
கொள்ளை சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டது தெரிய வந்தது. சவுதி அரேபியா தப்பிச் சென்ற அவர், அங்கேயே இத்தனை ஆண்டுகள் வசித்து வந்தார். ராஜேஷ்குமாரைப் பிடிக்க முடியாத நிலையில், சாலக்குடி முதல் வகுப்பு நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இத்தனை ஆண்டுகளாக ராஜேஷ்குமார் சவுதி அரேபியாவிலேயே வசித்து வந்தார்.

நாடு திரும்பிய நபர்
ராஜேஷ்குமார் இத்தனை ஆண்டுகள் சவுதியில் நிம்மதியாக வாழ்ந்து வந்துள்ளார். 16 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இனியும் திருட்டு வழக்கில் எல்லாம் தன்னை தேட மாட்டார்கள் என்றே அவர் கருதியுள்ளார். இந்த நம்பிக்கை உடன் அவர் சமீபத்தில் நாடு திரும்பியுள்ளார். இருப்பினும், இது தொடர்பான தகவல் சாலக்குடி போலீஸ் துணை எஸ்பிக்கு கிடைத்துள்ளது. உடனடியாக பழைய குற்ற வழக்கை அவர் தூசி தட்டி எடுத்துள்ளார்.

கைது
இது தொடர்பாக ராஜேஷ்குமார் வசித்த வந்த இலவந்திட்டா பகுதி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ்குமார் வீட்டில் அதிரடியாக நுழைந்த போலீசார், அவரை கைது செய்தனர். சாலக்குடி முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருட்டு சம்பவத்திற்கு இப்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications