கொடூரம்.. காரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த அம்மா-மகன் மீது இளைஞர் தாக்குதல்: பகீர் காரணம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கொல்லம் அருகே காரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த அம்மா மகனை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ஹிட் அடித்த படம் இஷ்க். காரில் அமர்ந்து இருக்கும் ஜோடியை அந்த வழியாக செல்லும் நபர் ஒருவர் தொல்லை செய்வதுதான் கதை. காருக்குள் எப்படி பெண்ணும் ஆணும் உட்கார்ந்து இருக்கலாம் என்று கேட்டு அந்த நபர் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயல்வார்.
கதை என்னவோ சாதாரணமாக தோன்றினாலும் கடைசி நொடிவரை இஷ்க் படம் மிகவும் திரில்லாகவும், சீட் நுனியில் உட்காரும் வகையில் எடுக்கப்பட்டு இருக்கும். இந்த படத்தில் நடந்ததை போன்ற நிஜ சம்பவம்தான் கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்துள்ளது.

என்ன?
கேரளாவில் கொல்லம் அருகே இருக்கும் பரவூர் பீச் பகுதியில் காரில் சென்ற 23 வயது இளைஞரும், அவரின் 44 வயது நிரம்பிய அம்மாவும், காரை ஓரமாக நிறுத்தி உணவு அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். இரவு 9 மணி அளவில் இவர்கள் காரை நிறுத்தி, இரவு பயணத்திற்கு முன்பாக உணவு அருந்தி உள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆஷிஷ் என்ற நபர் இவர்களை காரை விட்டு இறங்கும்படி தொந்தரவு செய்துள்ளார்.

மறுப்பு
தொடக்கத்தில் இவர்கள் இறங்க மறுத்த நிலையில், ஆஷிஷ் காருக்கு முன் நின்று அவர்களை செல்ல விடாமல் தடுத்துள்ளார். இதையடுத்து காரைவிட்டு அந்த இளைஞர் இறங்கி உள்ளார். அப்போது அந்த இளைஞரிடம் ஆஷிஷ் தகாத வார்த்தைகளை பேசி உள்ளார். அதோடு அம்மா - மகன் இருவரையும் தவறாக நினைத்துக் கொண்டு ஏன் இங்கே காரை நிறுத்தி உள்ளீர்கள்.. உள்ளே என்ன செய்கிறீர்கள் என்று மோசமான கேள்விகளை கேட்டு இருக்கிறார்.

மோசம்
இதனால் கோபம் அடைந்த இளைஞர் பதிலுக்கு திட்டி உள்ளார். பின்னர் ஆஷிஷ் அந்த இளைஞரையும் அம்மாவையும் மோசமான வார்த்தைகளில் திட்டி அவர்களின் காரில் தாக்குதல் நடத்த முயன்று உள்ளார். இந்த மோதலில் அந்த இளைஞருக்கு உடல் முழுக்க காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு அந்த பெண் மீது கற்களை வீசி எறிந்துள்ளார். அவர்களை தாக்கிவிட்டு ஆஷிஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அம்மாவும், மகனும் அந்த இரவே கொல்லம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார்
அங்கு இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஆஷிஷை கண்டுபிடித்த போலீசார், அவர் தமிழ்நாட்டிற்கு ஓட முயன்றதை கண்டுபிடித்து, எல்லை அருகே வைத்து கைது செய்தனர். இவரும் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான். போலீஸ் தேடுவதை தெரிந்து கொண்டு இப்படி தப்பி ஓட முயன்று இருக்கிறார்.

காரணம்
போலீஸ் விசாரணையில் அம்மாவும் மகனும் இருந்ததை பார்த்துவிட்டு தவறுதலாக நினைத்து கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும். அவர்கள் மீது சந்தேகம் வந்து இப்படி தாக்கியதாகவும் ஆஷிஷ் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். moral policing காரணமாக ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்றாலே.. அது அம்மா மகனாக இருந்தால் கூட தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications