வெள்ளத்தில் சரிந்த கான்கிரீட் வீடு! கதறி அழுத மக்கள்.. வெளியான ஷாக் வீடியோ! நெல்லை டவுனில் பரபரப்பு
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், திருநெல்வேலி டவுன் பகுதியில் கான்கிரீட் வீடு ஒன்று இடிந்து விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்திருக்கிறது. எனவே குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
4 மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களும் இன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Scary.. A house collapsed in the flood in #Tirunelveli pic.twitter.com/ig8x1Unk0q
— Vinodh Arulappan (@VinodhArulappan) December 18, 2023
திருநெல்வேலியை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில், மூலக்கரைப்பட்டி - 61 செ.மீ, நாங்குநேரி - 33 செ.மீ, மாஞ்சோலை - 55, ஊத்து - 50, நாலுமுக்கு - 47 செ.மீ, பாளையங்கோட்டை - 44 செ.மீ, அம்பாசமுத்திரம் - 43செ.மீ, சேரன்மகாதேவி - 41 செ.மீ, கன்னட அணைக்கட்டு - 41 செ.மீ, காக்காச்சி - 36 செ.மீ, நம்பியார் அணை - 36 செ.மீ, பாபநாசம் - 35 செ.மீ, மணிமுத்தாறு - 33 செ.மீ, களக்காடு - 32 செ.மீ, திருநெல்வேலி - 31 செ.மீ, கொடுமுடியாறு அணை - 30 செ.மீ, சேர்வலர் அணை - 27 செ.மீ, ராதாபுரம் - 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழை நீடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், நெல்லை கருப்பந்துறை பகுதியில் கான்கிரீட் வீடு ஒன்று வெள்ளத்தில் இடிந்து விழுந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. வீடு இடிந்து விழுந்ததால் அதன் உரிமையாளர் கதறி அழுதிருக்கிறார். நெல்லையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கருப்பந்துறையும் ஒன்று. இங்கு சுமார் 5-6 அடி வரை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications