சென்னையில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழை! எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு? முழு விவரம்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் நேற்றிரவு மட்டும் 16 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ. தொலைவிலும் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறுகிறது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திரம், அதையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இதன் காரணமாக திருவள்ளூர் தொடங்கி சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் என வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. திருவொற்றியூர் தொடங்கி திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர் வரையிலும், அண்ணாநகர், அம்பத்தூர் ஆவடி வரையிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு மட்டும் சென்னையில் 16 செ.மீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
அதாவது சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தில் 16 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆலந்தூரில் 9.7 செ.மீ பெருங்குடியில் அதிகபட்சமாக 7.4 செ.மீ, கோடம்பாக்கம், ஐஸ் ஹவுஸ் ஆகிய இடங்களில் 7.1 செ.மீ, அடையார் 6.9 செ.மீ, முகலிவாக்கம் 6.4 செ.மீ, வளசரவாக்கம் 6.3 செ.மீ, தேனாம்பேட்டை 6.3 செ.மீ என மழை பதிவாகியுள்ளது. மழை மேலும் நீடிக்கும் என்பதால், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 105 இடங்களில், 65 இடங்களில் நீர் அகற்றப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 40 இடங்களில் மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. மறுபுறம் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications