சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட நிலவரம் என்ன?
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் தான் சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த மழை நேற்று முதல் மீண்டும் பெய்ய தொடங்கி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த இந்த தாழ்வு பகுதி, அதற்கடுத்த, 2 தினங்களில் மேற்கு திசையில், தமிழகம்-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் தமிழகத்தில் நவம்பர் 12 முதல் 17ம் தேதி வரை சென்னை உள்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர்,வடபழனி, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி,மாங்காடு, குன்றத்தூர் மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதுதவிர இன்று காலை10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
அதன்படி கனமழை பெய்தாலும் கூட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் காலை 6.30 மணிக்கு அறிவித்தனர். ஆனால் காலை 7.15 மணிக்கு நிலைமை மாறியது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக ரஷ்மி சித்தார்த் ஜெகடே அறிவிப்பு செய்துள்ளார். அதேவேளையில் சென்னையில் இன்று வழக்கம்போல் கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications