"ரொம்ப மோசம்!" சென்னையில் நடந்தது போலவே இருக்கே.. தென்தமிழகத்தில் நகரங்களை சுற்றும் படகுகள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பேய் மழை வெளுத்து வாங்கும் நிலையில், சென்னையைப் போலவே அங்கும் தாழ்வான பகுதிகளில் இருப்போர் படகுகள் மூலம் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று (டிசம்பர் 16, 2023) 4 மாவட்டங்களில், அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பயங்கர கனமழை கொட்டித்தீர்த்தது.

அதிகபட்சமாகக் கடலோர பகுதியான தூத்துக்குடி காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 933 மில்லி மீட்டர் மழை பொழிந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்,.
கொட்டும் கனமழை: மேலும், திருச்செந்தூரில் 679 மிமீ மழை பதிவாகியுள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் 618 மிமீ மழையும் கோவில்பட்டியில் 495 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல சாத்தான்குளம் (466 மிமீ) தூத்துக்குடி (361 மிமீ) கடம்பூர் (348 மிமீ) ஒட்டப்பிடாரம் (356 மிமீ) குலசேகரபட்டினம் (326 மிமீ) பகுதிகளிலும் கனமழை கொட்டியுள்ளது. மழைப் பதிவாகி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பல வீடுகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வீடுகளில் புகுந்த மழை நீர்: திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஊர்கள் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.
இந்த வெள்ளத்தால், திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் மாவட்டங்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், விவசாய நிலங்கள், சாலைகள் ஆகியவற்றுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிப்பு மோசம்: நெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடங்கியுள்ளது.
தூத்துக்குடி, நெல்லையில் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது.
படகுகள்: இந்த கனமழையால், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், விவசாய நிலங்கள், சாலைகள் ஆகியவற்றுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கனமழையால் கன்னியாகுமரியில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளைச் சுற்றிலும் மழை நீர் தேங்கிய நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைப் பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகள் மூலமாக மீட்டு வருகின்றனர். இம்மாத தொடக்கத்தில் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது, எப்படி படகுகள் மூலம் மீட்கப்பட்டனரோ, அதேபோன்ற ஒரு நிலை இப்போது அங்கேயும் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடியாத நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications