குமரிக்கடல் அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. டெல்டாவில் கொட்டப்போகுது மழை! வானிலை அலர்ட்
சென்னை: குமரிக்கடல் அருகே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றும், நாளை டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் நாளை மறுநாள் முதல் 3 ஆம் தேதி வரை வட தமிழகம், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் இருக்கிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கனமழை வெளுக்கும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பரில் பெரிய அளவு மழை பெய்யவில்லை.

வட, தென் தமிழகத்தில் மழைக்கு சான்ஸ்
டிசம்பர் பிறந்ததும் ஆரம்பத்தில் 3 நாட்களுக்கு பெய்த மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்த கடும் குளிரான வானிலை நிலவி வந்தது. தென்மாவட்டங்கள், சென்னை என பல்வேறு இடங்களில் கடும் குளிர் நிலவி வந்தது. பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் வெப்பம் தெரியாத அளவுக்கு இருந்து வந்தது.
இந்த நிலையில் குமரிக்கடல் அருகே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கடுத்த நாட்களில் வட தமிழகம், தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்றைய கிளைமேட்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை திங்கட்கிழமை டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
3 ஆம் தேதி வரை
30 முதல் 1 ஆம் தேதி வரை: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 2 மறும் 3 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை குறையும்
இன்றும், நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
28-12-2025 மற்றும் 29-12-2025: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னையில் இன்று (28-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (29-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 28-12-2025 மற்றும் 29-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: 28-12-2025: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications