அடுத்த 3 மணி நேரம்.. சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் நேற்றைய தினம் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, நேற்றைய தினம் மாலை முதலே சென்னை உள்பட பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர், ஆவடி, பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.











Click it and Unblock the Notifications