அடுத்த 3 மணி நேரம்.. மக்களே அலர்ட்! குடையை ரெடியா வச்சிக்கோங்க.. 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், தேனி, தென்காசி, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்து 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்து இருந்தது.

இதே போல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, தென்காசி உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, வேலூர், திருச்சி, கிருஷ்ணகிரி, கரூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திண்டுக்கல், தென்காசி, தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் வருகிற 10 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications