ஷாக்.. வசித்தது 25,000 பேர்.. இப்போ ஒருவர் கூட இல்லையே! சென்னையில் மொத்தமாக காலியான பெரும்பாக்கம்
சென்னை: சென்னை மழை வெள்ளம் காரணமாக பெரும்பாக்கத்தை மக்கள் திடீரென்று மொத்தமாக காலி செய்துள்ளனர். இங்கிருந்த 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதால் அங்கு யாருமே இல்லாமல் அமைதியான இடமாக காட்சியளிக்கிறது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் கடந்த 3ம் தேதி இரவு முதல் 4ம் தேதி முழுவதும் விடாமல் கனமழை பெய்து வந்தது.

இதனால் ஏறக்குறைய அனைத்து சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். மழை நின்ற நிலையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு, மாநகராட்சி அதிகாரிகள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதன் பயனாக தற்போது சென்னையில் படிப்படியாக இயல்பு நிலை என்பது திரும்பி வருகிறது. இருப்பினும் சென்னை பெரும்பாக்கத்தில் தற்போதும் மழைநீர் தேங்கி உள்ளது. சென்னையில் அதிகப்படியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாக்கமும் ஒன்று. கடந்த 5ம் தேதி முதல் மழை இல்லாத நிலையிலும் தற்போதும் அங்கு மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால் பெரும்பாக்கத்தில் வசித்து வந்த சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நேற்று மாலையில் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் பெரும்பாக்கம் முற்றிலுமாக காலியாகி உள்ளது. இதனால் அங்கு அமைதியான நிலை ஏற்பட்டுள்ளது.
சதுப்பு நிலப்பகுதியாக அறியப்படும் பெரும்பாக்கத்தில் பெரிய பெரிய வீடுகள் உள்ளன. சதுப்பு நிலம் என்பதால் தேங்கிய மழைநீர் அப்படியே வடியாமல் உள்ளது. இதனால் வேறு வழியின்றி அனைத்து மக்களும் வெள்ளத்தால் வெளியேறி உள்ளனர். தற்போது அது பேய்நகரம் போல் அமைதியாக உள்ளது. மேலும் அங்குள்ள கடைகள், தொழில்நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் பெரும்பாக்கத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் வெளியேற இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி மக்கள் மொத்தமாக அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இந்த பகுதியில் இருந்து மட்டும் தற்போது 25,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு செல்ல பிராணிகளுடன் வீடுகளை காலி செய்துள்ளனர். மேலும் அங்கிருந்து தண்ணீர் வெளியேற போதிய கால்வாய் வசதி இல்லை என கூறப்படுகிறது. மக்கள் முழுவதுமாக வெளியேற இதுவும் முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் பெரும்பாக்கத்தில் வரும் காலத்தில் போதிய அளவுக்கு கால்வாய்கள் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications