இன்னைக்கு நைட் ஃபுல்லா மழை இருக்கு.. சென்னைக்கு அலர்ட் கொடுத்த வெதர்மேன்! பெரிய சம்பவம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், பருவமழை தொடங்கியதால் இன்று இரவு முழுவதும் மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது, "தற்போது கன்னியாகுமரி அருகே, குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது வலுப்பெற்று அடுத்தடுத்த நாட்களில் அரபிக் கடலை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேலடுக்கு சுழற்சியானது முதலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும். இப்படியாக வலுப்பெற்ற பிறகு அரபிக் கடலில் மேற்கு நோக்கி நகர்ந்து, இந்திய கடற்கரையை விட்டு விலகிச் செல்லும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது விலகிச் செல்லும் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும். குறிப்பாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை பருவமழை காரணமாக இன்று இரவு தொடங்கி அதிகாலை வரை மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை இரவு தொடங்கி காலை வரை நீடிக்கும்.
காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு மழையின் தாக்கம் சற்று குறையும். அதேபோல அரபிக் கடலில் மாலத்தீவு பகுதி மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகள் ஆகியவற்றில் நாளை முதல் கடல் கொந்தளிப்புடனும் சூறாவளி காற்று வீசியபடியும் இருக்கும். எனவே மீனவர்கள் இந்திய மாநில ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனத்தில் கொண்டு அந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்" என கூறியிருக்கிறார்.
முன்னதாக இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், "இன்று 16, அக்டோபர் 2025 தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா - மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் இன்று துவங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
நேற்று (15-10-2025) கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (16-10-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. நேற்று (15-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்றும் (16-10-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இன்று (அக்.16) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக்.17) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்.18ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.20ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.21ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.22ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (16-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (17-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications