தமிழகத்தில் இன்று கொட்ட போகுது கோடை மழை.. எங்கு தெரியுமா.. சென்னையில் என்ன கிளைமேட்? வானிலை மையம்
சென்னை: வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இன்று தென்தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பருவமழை சீசனில் நல்ல மழை பெய்தது. தமிழ்நாடு முழுக்க கடந்த சீசனில் நல்ல மழை பெய்தது. ஆனால், அதன் பிறகு மழை குறைந்து வெயில் அதிகரிக்கத் தொடங்கியது.

எப்போதும் மார்ச் ஏப்ரல் தான் வெப்பம் உச்சம் தொடும். ஆனால் இந்தாண்டு பிப். மாதமே வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்தது. ஈரோடு, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே வெப்பம் 100 டிகிரியை தாண்டி விட்டது.
மழை இருக்கு: இப்படி வெப்பம் தொடர்ந்து அதிகமாக இருந்து வரும் நிலையில், இன்று சற்றே நிம்மதி தரும் வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (04.04.2024) தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் ஏப்ரல் 8 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பம் அதிகம் தான்: அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 7 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 39°-41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 37°-39°செல்சியஸ் மற்றும் கடலோரப் பகுதிகளில் 33°-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று (03.04.2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இன்று மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications