அரபிக்கடலில் புயல் சின்னம்.. தேஜ் புயல் நகரும் பாதை.. மும்பைக்கு ஆபத்து நீங்கியதா?
சென்னை: அரபிக்கடலில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் நகரும் பாதையை வைத்து பார்க்கும்போது மும்பைக்கு வந்த ஆபத்து நீங்கியதாக தெரிகிறது. புயல் எப்போது உருவாகும் புயல் நகரும் பாதை எப்படி என்று பார்க்கலாம்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று காலை 19ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுவடைந்து 22-10-2023 மாலை தீவிர புயலாக நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24-10-2023 வாக்கில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகும் தேஜ் புயலானது மும்பையை தாக்கக்கூடும் என்று முன்பு கூறப்பட்ட நிலையில் தற்போது புயலானது ஓமன் நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே ஏற்பட்டிருந்த அச்சம் நீக்கியுள்ளது.
நேற்று காலை 19ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை 05.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 23-10-2023 வாக்கில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது
நாளைய தினம் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 22ஆம் தேதி மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications