அனல் காற்று வீசுதே.. மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட்.. அச்சுறுத்தும் வானிலை.. பூமி குளிர்வது எப்போ?
மதுரை: தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் 18 ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.இன்னும் சில நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும் போது சாரல் என்று பாட வேண்டிய ஆடி மாதத்தில் அடிக்குது அனலு என்று பாடிக்கொண்டிருக்கின்றனர் தென் மாவட்ட மக்கள். ஜில்லென்ற சாரலும் தூறலுமாக ஆடி மாதம் வழக்கமாக கடந்து போகும். அடுத்தது அடை மழைதான் என்று விதைப்பு பணிகளை தொடங்கி விடுவார்கள் விவசாய பெருமக்கள். கடந்த சில ஆண்டுகளாக அப்படித்தான் மாதம் மும்மாரி தவறாது மழை பெய்தது. எங்கும் பச்சைப்பசேல் என காட்சி அளித்தது.

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஏன் இப்படி வெயிலடிக்கிறது என்று மக்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர். வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசுகிறது. மே மாதத்தில் கூட கோடை மழை பெய்தது. தென் மேற்கு பருவமழை தொடங்கி பிறகும் நடப்பாண்டு மழையே இல்லையே என்று ஏங்கத் தொடங்கி விட்டனர் மக்கள். அக்னி நட்சத்திர காலத்திற்கு இணையாக மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாத துவக்கத்தில் இருந்தே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தொடர்ந்து கனமழை இருந்து வந்தது. தற்போது மழையின் அளவு குறைந்து மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. பதினெட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேல் பதிவாகியுள்ளது.
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 107 டிகிரி, மதுரை மாநகரில் 105 டிகிரி, திருச்சி, நாகப்பட்டினத்தில் தலா 102 டிகிரி, புதுச்சேரி, கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி, காரைக்கால், அதிராமபட்டினத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
பொதுவாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெயிலின் தாக்கம் தணிந்து பலத்த காற்று வீசும். ஆனால், அதற்கு மாறாக பகல்நேரங்களில் சூரியன் சுட்டெரித்து வரும் நிலையில் அனல் காற்று வீசுகிறது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வீடுகளிலேயே முடங்கினர். எந்த ஆண்டும் இல்லாத அளவு நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியிலும் மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் 100 பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தியது. சாலைகளில் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இரவிலும் வெப்பச்சலனத்தால் மக்கள் கடும் புழுக்கத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். காற்றின் ஈரப்பதத்தின் அளவு கீழ்ப்பகுதியில் சரியாக இருந்தாலும், மேல் பகுதிக்கு செல்ல செல்ல அதன் ஈரப்பதத்தின் தன்மை குறைந்து கொண்டே உள்ளது என்றும் அதனால் மேகக் கூட்டங்கள் உருவாவதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்றும் அவர் கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரிய அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் பாலச்சந்திரன் விளக்கம் தந்துள்ளார்.
பூமி குளிர மழை பெய்தால் மட்டுமே மக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். வருண பகவான் மனது வைப்பாரா? இயற்கை கருணை காட்ட வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் இறைவனை வேண்டத்தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications