பொல பொலன்னு கொட்ட போகுது மழை.. கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டத்திலும் பேரிடர் மீட்பு படை ரெடியா இருக்கு
சென்னை: தமிழகத்தில் வரும் 22ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 முக்கிய மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினரும், அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையிலேயே இருக்கிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்பட, 21 மாவட்டங்களில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டிருந்த அறிவிப்பில் உள்ளதாவது:

தொடரும் மழை: தென்மாவட்ட கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
கனமழை: நாளை 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை. நீலகிரி, கோவை, திருப்பூர், துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வரும், 20, 21ம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மிக கனமழையும், மற்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரப் பகுதி, கேரள கடலோர பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, நாளை முதல் 21ம் தேதி வரை மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தது.
அறிவிப்பு: இதனிடையே, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில், மே 22ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
எனவே, கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவுறுத்தியிருக்கிறது.. இதையடுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன..
அரக்கோணம்: அதேபோல, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு, மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்..
அதாவது, நெல்லை, குமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு தலா 3 குழுவினரும், கோவைக்கு ஒரு குழுவினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.. இதில் ஒவ்வொரு குழுவிலும், 30 வீரர்கள் இருக்கின்றனர்.. இவர்கள் தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயாராக உள்ளனர். அதேபோல, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications