மிக்ஜாம் புயலால் அதி கனமழை.. திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்..டிசம்பர் 3,4ல் 10 மாவட்டங்கள் ரொம்ப உஷார்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் டிசம்பர் 4ஆம் தேதியன்று கரையை கடக்கும் என்றும் அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அது புயலாக வலிமையடையக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். டிசம்பர் 3ஆம் தேதியன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் வலிமையடையும் புயலானது நகர்ந்து டிசம்பர் 4ஆம் தேதியன்று வடசென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 4ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 3ஆம் தேதியன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நாளான டிசம்பர் 4ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications