கோவை, நீலகிரியில் இன்றும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தவிர மற்ற மாவட்டங்களிலும், சென்னையிலும் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை.5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
ஜூலை.6ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை.7 முதல் 9ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (05-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாகவே பருவமழை தொடங்கிவிட்டது. கடந்த மே மாதம் சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. குறிப்பாக சென்னையில் இந்த ஆண்டு மே மாதம் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. ஆனால் ஜூன் மாதம் மொத்த உக்கிரத்தையும் வெயில் கொட்டி தீர்த்தது. வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் அதிகமாக இருந்தது.
பருவமழையின் தாக்கம் கொங்கு மாவட்டங்களில்தான் அதிகமாக எதிரொலித்தது. எனவே டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதுரையில் சில நாட்களில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு பதிவாகியிருந்தது. மறுபுறம் கொங்கு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. அதேபோல கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் கர்நாடக மாநிலத்தின் கேஎஸ்ஆர் மற்றும் கபினி அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அங்கிருந்து திறந்தவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை நிரப்பியிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நீர் திறப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications