ஹெலிகாப்டர் கிளம்பிருச்சு.. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 500 பயணிகள்! விரைவில் மீட்பு
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட 500 ரயில் பயணிகளை மீட்க ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளது.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல இடங்களில் ரயில் தண்டவாளங்களே அடித்து செல்லப்பட்டு உள்ளன. குறிப்பாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதையை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. தூத்துக்குடியின் தட்டப்பாறை - மேலவிட்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே 7 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில் உள்ள 9 நீர்வழிப்பாலங்களில் வெள்ளநீர் வழிந்தோடியபடி சென்று கொண்டு உள்ளது.

அதேபோல் நெல்லையை அடுத்த செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்களுக்கு இடையே 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளத்தில் இருந்த சரளை கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் பகுதியே தனித்தீவாக காட்சி தருகிறது. ஸ்ரீவைகுண்டம் - செய்துங்கநல்லூர் ரயில் தண்டவாள பாதையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ஆனால், அதற்கு முன்பாகவே கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி இரவு 8.25 மணிக்கு புறப்பட்ட திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் 33 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் அன்று இரவு 9.19 மணிக்கு நிறுத்தப்பட்டது. சுமார் 800 பயணிகள் இந்த ரயிலில் இருந்தனர். அவர்கள் வெள்ளம் காரணமாக நடுவழியிலேயே மாட்டிக்கொண்டனர். இவர்களில் 300 பேர் மாநில அரசு அதிகாரிகள் உதவியுடன் நேற்று அதிகாலை 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தபோது வெள்ளம் அதிகரித்து சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டம் பகுதியே தனித்தீவாக காட்சியளித்ததை அடுத்து தூத்துக்குடியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களாலும் சாலை மார்க்கமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை அடைய இயலவில்லை. ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே அவர்களை மீட்க முடியும் என்ற அசாதாரண சூழல் நிலவியது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி உள்ள 500 பயணிகளுக்கு சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி காலை தொடங்கி இருக்கிறது. இதற்காக மதுரையில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளது. அதன் மூலம் பயணிகள் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications