சவுத் பெல்டை புரட்டிய பெரு மழை.. இன்னும் அதிகரிக்கும் என எச்சரிக்கை! மக்களே ரொம்ப கவனமா இருங்க
சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலோர பகுதிகளில் நீடித்த காற்றழுத்த தாழ்வு பகுதி குமரிக்கடல் நோக்கி நகர்ந்துள்ளது. இத்தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்திற்கு குமரிக்கடல் பகுதியிலேயே நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தென் கோடி மாவட்டங்களில் வரும் மணி நேரத்தில் மழை படிப்படியாக அதிகரிக்ககூடும்.

வானிலை எதிர்ப்பார்ப்பு: நாள் 1 (17.12.2023) & நாள் 2 (18.12.2023)
தமிழகத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி பரவலாக அநேக இடங்களில் கனமழையும், மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதிகனமழையும் பதிவாகும். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதீத கனமழை வாய்ப்பு உள்ளது.
காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை எதிர்ப்பார்க்கலாம். மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் மிககனமழை பதிவாகும். மத்திய & தென் மாவட்டங்களான கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும்.
மத்திய உள் மாவட்டங்களிலும் மழை எதிர்ப்பார்க்கலாம். தமிழகத்தின் மேற்குறிப்பிடாத மாவட்டங்களில் மிதமான மழையும், ஒரிரு இடங்களில் சற்றே கனமழையும் பதிவாகும். டிசம்பர் 19, 20 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை தொடரும். சென்னை உள்பட வடகோடி மாவட்டங்களில் மழை வாய்ப்பு குறைவு. ஒருசில இடங்களில் மிதமான மழை பதிவாகலாம்.
முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்!
1. டெல்டா & தென் கடலோர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக பாக் நீர் இணைப்பு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறுகிய காலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றும், நாளையும் தேவையற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3. மயிலாடுதுறை மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை மத்திய & தென்கடலோரம் & அதனை ஒட்டிய மாவட்ட விவசாயிகள் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் அடுத்த இரு தினங்களுக்கு ஒத்திவைப்பது நல்லது.
4. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், நீர் வீழ்ச்சிகள் பகுதிகளுக்கு டிசம்பர் 19 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
5. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் இருப்பவர்கள், பழுதடைந்த வீடுகளில் இருப்பவர்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
6 அச்சப்படும் அளவிற்கு ஏதும் இடங்களில் அதித கனமழை வாய்ப்பு ஒரிரு இடங்களில் உள்ளது சற்று எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருந்தால் போதும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications