கரூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் முக்கிய எச்சரிக்கை.. “மதிய நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம்..”
கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களில், கிழக்கு இந்தியா முழுவதும் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி, தற்போது தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கத்தரி வெயில் தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் பல இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வெப்ப அலை தொடர்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூரில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், வெயிலின் தாக்கத்தால் உடல் நலக் குறைவி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications