துபாயில் அருவி போல் கொட்டிய மழை நீர்.. சென்னை போல் கலங்க வைத்த வெள்ளம்.. மொத்தமாக மூழ்கிய கார்கள்
துபாய்: துபாயில் நேற்று ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடிய விடிய கனமழை பெய்தது.. சென்னையில் பெய்தது போல் வரலாறு காணாத மழை பெய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது.
காலநிலை மாற்றத்தால் எங்கோ பெய்ய வேண்டிய மழை,, எங்கோ பெய்வது. அதுவும் குறைந்த நேரத்தில் மிக அதிக மழை கொட்டுவது உலகம் முழுவதும் நடக்கிறது... சீரற்ற முறையில் தட்பவெப்ப நிலை மாறுகிறது... கடுமையான வெயில், அதீத மழை, மோசமான வறட்சி என சுற்றுச்சூழல் பாதிப்பால் உலகமே பாதிப்பை சந்தித்துள்ளது.

அதன் தாக்கம் தற்போது துபாயில் தெரியவந்துள்ளது. துபாயின் அமீரகத்தில் நேற்று அபுதாபி, அல் அய்ன், துபாய், சார்ஜா, அஜ்மான், புஜேரா, ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளின் பல சாலைகளில் வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதேநேரம் ஏற்கனவே மழை பெய்வது குறித்து எச்சரிக்கை காரணமாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றினார்கள். பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டார்கள்..
துபாயில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியபடி இருந்தது. இதனால் அங்கு வாகனங்கள் மெதுவாக நீந்தியபடி தான் சென்றன. சார்ஜா மற்றும் அஜ்மானிலும் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளமாக மாறியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு தவித்தார்கள்..
கனமழை காரணமாக துபாய் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி மற்றும் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். டேங்கர் லாரிகள் மற்றும் மோட்டார் பம்புகள் வைத்து தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வீடியோ ஒன்று துபாய் சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், கனமழை மற்றும் மக்களின் பாதிப்பு குறித்து வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கார்கள் பல தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.. மழையோ அருவியில் தண்ணீர் கொட்டுவது போல் கொட்டுகிறது.. சாலைகளை பார்க்கும் போது, சாலை தானா அல்லது காட்டாற்று வெள்ளம் போகும் வழித்தடமா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. அற்புதமான சாலைகளை.. அப்படியே மூழ்கடித்து, ஒன்றுமில்லாமல் செய்தது மழை.. துபாயில் பெய்துள்ள இந்த மழை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்..












Click it and Unblock the Notifications