உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்.. தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?
சென்னை: அரபிக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9 ஆம் தேதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது.

அதன்படி, இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications