சென்னை + தென் தமிழக மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றும் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இதற்கு எல் நினோதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். வெயிலின் தாக்கம் மக்களை மட்டுமல்லாது வன விலங்குகளையும் கடுமையாக பாதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்பட்டது.

அதற்கேற்றார்போல இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டது. வழக்கமாக வேலூர் தொடங்கி ஈரோடு வரை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை கோவை, நீலகிரி என வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. ஊட்டியில் இதுவரை பதிவாகாத அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. எனவே நீர் நிலைகள் முற்றிலும் காய்ந்து போயின. எதிர்பார்த்த அளவுக்கு குளுமை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்தன. அதேபோல உள்ளூர் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, நீலகிரியில் இந்த நிலைமை எனில், மற்ற மாவட்டங்களில் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. ஆனால் இந்த வெயில்தான் வெப்பச்சலனத்தை ஏற்படுத்தி நல்ல மழையை கொண்டு வந்தது.
எங்கெல்லாம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்ததோ அங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கியது. மே மாதத்தின் இறுதியில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்திருந்தது. ஆனால் சென்னையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஜூன் தொடக்கத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பொளந்து எடுத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் தணிந்து, பரவலாக மழை பெய்து வருகிறது.
வானிலை இப்படி மாறியிருக்கையில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. குறிப்பாக, இன்று நீலகிரி கோவையில் கனமழை பெய்யும் என்றும், 6ம் தேதி வரை தமிழகத்தில் பரவலா மிதமான மழைபெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி இன்றும் சென்னை உட்பட தமிழகத்தின் பரவலான பகுதிகளில் இன்றும் மிதமான பெய்யும் என தெரிவிக்கபட்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 5ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications