எந்த சூழல் வந்தாலும் சமாளிக்க ரெடி.. 4,970 முகாம்கள் தயார்: கனமழை தொடரும் நிலையில் அமைச்சர் பேட்டி!
சென்னை: கனமழையால் ஏற்படும் எந்தவிதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், அரியலூர், நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த, பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் 4,970 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கடற்கரை ஓர மாவட்டங்களில் 121 இடங்களில் புயல் மற்றும் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் நேற்று மழை பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 19 செ.மீ மழை பெய்துள்ளது என்றும் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் மழை காரணமாக நேற்று 4 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. தூத்துக்குடியில் 2 குடிசை வீடுகள், நெல்லை, நாகையில் தலா ஒரு குடிசை வீடு சேதம் அடைந்துள்ளது. நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 400 மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. எந்த சூழல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. மக்களுக்கு உரிய தகவல் கொடுத்த பிறகே நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதற்குரிய உத்தரவுகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு பிறபிக்கப்பட்டுள்ளன. சென்னையில் 169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 22 சுரங்கப் பாதைகளும் கண்காணிக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், உயிர்சேதம் இல்லாத நிலை உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் 85 சதவிகிதமும், புழல் ஏரியில் 82 சதவிகிதமும் நீர் இருப்பு உள்ளது. வானிலை மையத்துடன் இணைந்து, மழைக்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கனமழையால் ஏற்படும் எந்தவிதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications