தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவது எப்போது? சாதகமான 2 சூழல்கள் என்ன? வானிலை மையம் குட் நியூஸ்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்குகிறது. அரபிக் கடலில் புயலும் வங்கக் கடலில் ஹாமூன் புயலும் இருந்ததால் வடகிழக்கு பருவமழை வலுவிழந்திருந்தது.

தற்போது 2 புயல்கள் கரையை கடந்துவிட்டதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடையும். அக்டோபர் 29ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும். வடகிழக்கு பருவக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நேற்று 24 ஆம் தேதி காலை வடமேற்கு மற்றும் அதனையொட்டிய வடகிழக்கு வங்கக் கடலில் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் ஹாமூன் நேற்று மாலை 5.30 மணிக்கு தீவிர புயலாக வலுவிழந்தது. இன்று காலை 1.30 மணி முதல் 2.30 மணி அளவில் புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங்கிற்கு அருகில் கடந்தது.
வடக்கு கேரளா, மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் மேற்கு வங்கக் கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். வரும் 29ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அது போல் அக்டோபர் 30, 31 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை அறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications