கோவை, நீலகிரிக்கு "ஆரஞ்சு அலர்ட்.." சென்னை உட்பட தமிழகம் முழுக்க வெளுத்து வாங்க போகுது கனமழை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாகக் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையிலும் கூட மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், புதுவையில் மிக லேசான மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 90 மிமீ மழை பெய்துள்ளது.. வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) தலா 80 மிமீ மழையும், செருமுள்ளி (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 70 மிமீ மழையும், தேவாலா (நீலகிரி) 60 மிமீ மழையும் பதிவாகி உள்ளது. கோவை, நீலகிரி, விழுப்புரம், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில், 2°- 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 37.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 31°- 37° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34°- 37° செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°- 37° செல்சியஸ், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 29°- 36° செல்சியஸ் & மலைப்பகுதிகளில் 18°- 25° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ் (-0.2° செல்சியஸ்) மற்றும் மீனம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ் (-0.4° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
மழை இருக்கு: வரும் நாட்களில் நிலவும் கிளைமேட் தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜூன் 25) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 26) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 27ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 28 வரை ஜூன் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு: இன்று முதல் ஜூந் 28 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில், 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று முதல் ஜூன் 28 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூன் 26 வரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எச்சரிக்கை: ஜூன் 27 மற்றும் ஜூன் 28 தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூன் 28 வரை தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications