சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. திருவள்ளூர், செங்கல்பட்டுக்கும் அலர்ட்! வானிலை மையம் ஜில் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், குறிப்பாக சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பெரிதாக மழை பெய்யவில்லை. மாறாக வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. தென்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. எனினும் நேற்று முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

காலை 10 மணி வரை
இன்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று காலை 8 மணியளவில் கூட திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று முன் தினம் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (03-11-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும்.
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்
தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05-11-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06-11-2025 மற்றும் 07-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08-11-2025 மற்றும் 09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெயில் அதிகரிக்கும்
அதிகபட்ச வெப்பநிலை: இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் இன்று (04-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்: 04-11-2025 மற்றும் 05-11-2025: மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications