இந்தா வந்துட்டானுங்கல்ல என் செல்லங்கள்..சென்னையை சுத்து போட்ட மேகங்கள்..இரவில் பெய்யும் ஜில்ஜில் மழை
சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் சென்னையில் இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நேற்று (24-11-2024) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (25-11-2024) காலை 0830 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது,

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 860 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
மேலும், இன்று இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே வங்கக்கடலில் தெற்கு- தென் கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை பெற்று இருக்கும் நிலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் எனவும், தற்போது 18 கிலோமீட்டர் வேகத்தில் அது நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
Heavy rain At madippakam #Chennai #ChennaiRains pic.twitter.com/TAJ6LQZo4e
— Mani (@mani17081996) November 25, 2024
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் மாலையில் இருந்தே சென்னை வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் மாலையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் இரவு பத்து மணிக்கு மேல் சென்னையில் பல்வேறு பகுதிகளை நல்ல மழை பெய்தது. குறிப்பாக சென்னை எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம்,கிண்டி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அடையார், மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் திடீரென பெய்த மழையால் சென்னை வழக்கத்தை விட குளுமையாக காணப்படுகிறது.
மேலும் இரவு ஒரு மணி வரை கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் ,உத்திரமேரூர், வாலாஜாபாத், வண்டலூர், சோளிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும், குன்றத்தூர், ஆலந்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications