அப்பாடா.. வெயில் வந்துருச்சுப்பா! சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு முகத்தைக் காட்டிய சூரியன்!
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை புரட்டி எடுத்த நிலையில், இன்று சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத அளவில் பெய்த மழையால், நகரமே மழைநீரில் மிதந்தது. மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தரைத் தளங்களில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை இரவு வரை தொடர்ந்து மழை பெய்ததால், தண்ணீர் வடிய வழியின்றி, வெள்ள நீர் மட்டம் உயர்ந்துகொண்டே சென்றது.

தற்போது மிக்ஜாம் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. சென்னைக்கு வடக்கே 200 கிலோமீட்டர் தொலைவுக்கு புயல் விலகி சென்றுள்ளது. இதனால் சென்னையில் இன்று காலையில் இருந்து மழை இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை பெய்த கனமழையால் சென்னை முழுவதும் மழைநீர் வெள்ளமாகத் தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் மொத்தமாக 47 செ.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் காட்டுப்பாக்கத்தில்தான் மிக அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ, சென்னை மீனம்பாக்கத்தில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 20.4 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று காலையிலேயே சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களாக பகலில் துளி வெயிலையும் பார்க்க முடியாத அளவுக்கு மலை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று வெயில் வெளிச்சம் பட்டுள்ளது சென்னை மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. பல பகுதிகளில் மழைநீர் வடிந்துவிட்டது. மிகவும் தாழ்வான சில பகுதிகளில், இன்று, மழைநீர் வடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications