வெதர்மேன் சொன்ன குளுகுளு அப்டேட்.. "இன்று மட்டுமில்லை! அடுத்த 2 வாரங்களுக்கு.." ஆஹா நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் அதிகரித்து மக்களைப் படாய் படுத்தி வந்தது. இதற்கிடையே இன்று எதிர்பார்க்காத வகையில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மழை இருக்கும்.. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. பருவமழை சீசனுக்கு பிறகு மாநிலம் முழுக்கவே வெப்பம் அதிகமாகவே காணப்பட்டது. பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டியது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லக் கூட முடியாமல் கஷ்டப்பட்டனர்.

சட்டென மாறிய வானிலை
ஆனால், இன்று காலை வானிலை மொத்தமாக மாறியது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. குறிப்பாகச் சென்னையில் வெப்பம் பாடாய்ப்படுத்தி வந்த நிலையில், காலை பெய்த மழை வெப்பத்தைக் கணிசமாகக் குறைந்தது. மழை இல்லாத இடங்களில் கூட வெப்பம் குறைந்தே இருக்கிறது. இதனால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்.. வரும் நாட்களில் எங்கு மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
வெதர்மேன் அலர்ட்
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மார்ச் மாத வழக்கத்திற்கு மாறான வெப்பமான நாட்களுக்குப் பிறகு, சமநிலைப்படுத்த இயற்கை சரியான நேரத்தில் மழையைக் கொண்டு வந்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும். இப்போது கடலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது நேரம் செல்ல செல்ல உள் தமிழக மாவட்டங்களுக்கு நகரும். மதுரை மற்றும் கரூர் மாவட்டங்கள் அதீத வெயிலுக்கு நடுவே தேவையான மழையைப் பெற்றுள்ளது.
சென்னையில் இன்று மேகமூட்டம் காணப்படும். தென் சென்னையில் நல்ல மழை பெய்யும். சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும். இது ஏப்ரல் மாதத்தின் அதிர்ஷ்டமான நாள் என சொல்லலாம்..
மழை எங்கே
மேற்கு மற்றும் உள் தமிழகப் பகுதிகளிலும் பரவலாகப் பெய்யப் போகிறது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கரூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
இரு வாரங்களுக்கு வெப்பம் குறைவு
பெங்களூரிலும் கூட பரவலாக மழை பெய்யப் பெய்யும்.. சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பம் குறைவாகவே இருக்கும். ஆனால் ஈரப்பதம் அதிகரிப்பதால் அசவுகரியம் இருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் கிட்டதட்ட இதே கருத்தே கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications