அடுத்த ரவுண்டை ஆரம்பித்த மழை! பொங்கலுக்கு ஊருக்கு போய் சேர முடியுமா? வானிலை மையம் தந்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்றைய தினம் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊருக்குச் செல்வோர் வானிலையைப் பொறுத்து தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை குறைந்துள்ள சூழலில், குளிர் அதிகரித்துள்ளது. காலை நேரங்களில் வாகனம் ஓட்ட சிரமப்படும் அளவுக்கு மழை அதிகமாக இருக்கிறது.

இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது தொடர்பான தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது. அதில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு இலங்கைக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று ஜனவரி 12ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 15ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்:
ஜனவரி 16, 17 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜனவரி 18ம் தேதி கூடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கூடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் ஜனவரி 14 முதல் 16ம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதளை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் தெற்கு இலங்கை கடலோர பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications