வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயல்.. எங்கு கரையை கடக்கும்? எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்
சென்னை: 2023ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்தில் புதிய புயல் ஒன்று வங்கக்கடலில் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிட்டுள்ளனர். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

மழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கடலூர், இராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய புயல்: சமீபத்திய வானிலை நிலவரப்படி வங்காள விரிகுடாவில் மற்றொரு சூறாவளி புயல் உருவாக உள்ளது. இது இந்த வருடத்தில் நான்காவது புயலாக இருக்கும் என்றும் இந்தியா, வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை தாக்க வாய்ப்புள்ளதாகவும் ஸ்கைமெட்வெதர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்: இதனிடையே வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலானது டிசம்பர் 5ஆம் தேதி கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் கிழக்கு இந்தியா, மியான்மர் பங்களாதேஷ் நாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று மியான்மர் நாடு பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கவனம்: காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications