Weather: அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்கும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், சென்னை எண்ணுார், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா, 15 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு 13 செ.மீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தலா, 12 செ.மீ; சோழிங்கநல்லுார் சத்தியபாமா பல்கலை, மணலி புதுநகர், சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழகம், திருக்கழுக்குன்றம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, இலுப்பூர் ஆகிய இடங்களில் தலா, 11 செ.மீ மழை பெய்துள்ளது.

அதன்படி இன்று பகல் 1 மணி வரை நீலகிரி, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 4) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தென்மேற்கு வங்க்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், நேற்று முன்தினம் (டிசம்பர் 02) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அதை தொடர்ந்து வடக்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது.
பின்னர் மீண்டும் வந்த பாதையிலேயே தெற்கு, தென்மேற்கு நோக்கி நேற்று நகர துவங்கியது. நேற்று பகல் நிலவரப்படி, புதுச்சேரி நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இன்று, இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 9ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும். கிருஷ்ணகிரி, தருமபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications