ஐடி ஆக்ட் 66(A): மத்திய அரசு, தமிழகம், புதுவை உட்பட 5 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

டெல்லியைச் சேர்ந்த மாணவி ஸ்ரேயா, ஐடி ஆக்ட் 66-Aக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் இந்த சட்டமானது அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி இன்று ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது ஆஜரான அட்டர்னி ஜெனரல், மகராஷ்டிராவில் பால்தாக்கரே மறைவையொட்டி ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக இளம்பெண்கள் கைது செய்யப்பட்டது தவறானது. அதற்காக 66(A)ஐ நீக்கக் கூடாது என்று கூறினார். மேலும் இந்த சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருக்கிறது என்றார்.
இந்த வழக்கில் ஒரு என்.ஜி.ஓ அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் ஒரு பிரிவு மட்டுமல்ல.. பல பிரிவுகளுமே அரசியல்சாசனத்துக்கு விரோதமானதாக இருக்கிறது என்று கூறினார். இதற்கு மாணவி ஸ்ரேயாவின் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ஐடி ஆக்ட் 66(A)-ஐ பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்காளம், டெல்லி, புதுச்சேரி மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பாடகி சின்மயி விவகாரத்தில் இருவரும் புதுச்சேரியில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ஒருவரும் ஐடிஆக்ட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் பால்தாக்கரே மறைவின் போது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு எதிராக கார்ட்டூன்களை ஃபேஸ்புக்கில் போட்டதற்காக பேராசியர் உட்பட இருவர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications